கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினமும் பொதுமக்களை தெரு நாய்கள் அச்சுறுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கோட்டக்குப்பத்தில் பல்வேறு இடங்களில் சாலையில் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெரு நாய்களால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இரவு நேரங்களில் வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.
கோட்டக்குப்பத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று வீட்டுக்குள் சென்று ஒரு மூதாட்டியை கடித்துள்ளது. அதேபோல், இரவு நேரங்களில் வாகன வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தெரு நாய்கள் துரத்தி அச்சுறுத்தி வருகிறது. இதனால், இதுவரை பல பேர் தெரு நாய்களால் அச்சுறுத்தப்பட்டு, கடிபட்டு காயமடைந்துள்ளனர். பல இடங்களில் சாலையின் குறுக்கே நாய்கள் ஓடியதால், மோட்டார் சைக்கிளில் சென்ற பலர் விபத்தில் சிக்கும் சம்பவமும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
மேலும், பிற பகுதியிலிருந்து கோட்டக்குப்பத்தில் நாய்களை விடுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தேவையில்லாமல் வீட்டில் நாயை வளர்த்துவிட்டு வெளியே விடுகின்ற நபர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் எனவும், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.