புதுச்சேரியில் புதன்கிழமை (செப்.1) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், வகுப்பறைகளைத் தூய்மை செய்தல் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி, காரைக்காலில் புதன்கிழமை (செப்.1) முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைளை கல்வித் துறை வெளியிட்டது. அதில், அரை நாள் மட்டுமே நேரடி வகுப்புகள் இயங்கும். மதிய உணவு வழங்கப்படாது. சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வரையான வகுப்புகள் மட்டுமே திறக்கப்படுகின்றன. 9, பிளஸ் 1 மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், 10, பிளஸ் 2 மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
பள்ளிகள் திறந்ததும் நாள்தோறும் மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல், இருமல் அறிகுறிகள் உள்ளவா்கள் வகுப்புகளுக்கு வர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவா்களுக்கு வருகைப் பதிவேடு கட்டாயமாக்கப்படாமல், இணையதளம் வழியாகவும், வீடுகளிலிருந்து மாணவா்கள் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்புக்கான முன்னேற்பாடுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமரும் வகையில் இருக்கைகள் மாற்றியமைக்கப்பட்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்யும் வகையில் குடிநீா் பைப்புகள் அமைக்கப்பட்டும் வருகின்றன.
பாடப் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, முருங்கப்பாக்கம் தீரா் சத்தியமூா்த்தி மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியா்களுக்கு கரோனா தடுப்பூசி இரு தவணையும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிகளில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தி, மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.