28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
பிற செய்திகள்

தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள் – 20 முக்கிய தகவல்கள்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவசர தேவைகளுக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஆட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தவிதமான அனுமதியும் தேவை இல்லை என்று இந்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் வேறு என்னென்ன தளர்வுகள்?

  • அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அரசால் விரைவில் வெளியிடப்படும்
  • இதன்மூலம் ஒரு நாளுக்கு தரிசனத்துக்கு வரும் அதிகபட்ச பக்தர்களின் எண்ணிக்கையும் கர்ப்பகிரகம் போன்ற புனித இடத்தில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாவட்டத்திற்கு உள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்தும் சென்னை பெருநகர பேருந்து போக்குவரத்தும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  •  சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தும் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனுமதிக்கப்படும்.
  • வணிக வளாகங்கள் ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களுடன் மத்திய அரசின் குளிர்சாதன வசதி கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மற்றும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படும்.
  •  வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்குவதற்கான தடை தொடரும்.
  •  சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
  •  உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இரவு 9 மணி வரை வாங்கலாம்.
  •  தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  •  எனினும் தவிர்க்க இயலாத பணிகள் தவிர தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்கப்டுகிறார்கள்.
  •  தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகள் மற்றும் பிற விருந்தோம்பல் சேவைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
  •  உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிக்கான பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.
  • அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கும். தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மற்றும் தொழிற்சாலை போன்ற பணியிடங்களில் தடுப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
  • நீலகிரி மாவட்டத்திற்கும் கொடைக்கானல் ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்கள் செல்லும் சுற்றுலா பயணிகள் மாவட்ட ஆட்சித்தலைவரின் அனுமதி பெறுவது அவசியம்
  • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்குவதற்கான தடை தொடரும். எனினும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.
  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.
  • மதம் சார்ந்த கூட்டங்கள், சமூக, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

ரயில் – விமான போக்குவரத்து

மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்ட தடங்களில் மட்டும் செயல்படும். எனினும், மாநிலத்திற்குள் பயணியர் ரயில்கள் செயல்பட 15.9.2020 வரை அனுமதியில்லை. 15.9.2020க்குப் பிறகு, தமிழ்நாட்டிற்குள் பயணியர் ரயில்கள் அனுமதிப்பது பற்றி, சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கப்படும்.

தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில்இருந்து 25 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 50 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.

இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.



-நன்றி பிபிசி

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

முஸ்லீம் மெடிக்கல் பவுண்டேசன்னின் வேண்டுகோள்..

ஆரோவில் புறக்காவல் நிலையம் சார்பாக கேமரா, மின் விளக்கு, மரம் நடுதல் மற்றும் குடிநீர் தொட்டி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு திறப்பு விழா நடைபெற்றது.

தமிழகத்தில் புதிய உச்சமாக ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா.

Leave a Comment