கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பல மணி நேரமாக நீடிக்கும் மின்வெட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இப்பகுதியில் இன்று காலை முதல் மாலை வரை பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. பணிகள் முடிந்து மாலையில் மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே பெய்த மழையின் காரணமாக மீண்டும் மின்தடை ஏற்பட்டது. ஆனால், அதன்பிறகு தற்போது வரை மின் விநியோகம் சீரமைக்கப்படவில்லை.
தொடர்ந்து பல மணி நேரமாக மின்சாரம் இல்லாத காரணத்தால், வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர்களின் (Inverter) பேட்டரியும் தீர்ந்துவிட்டன. இதனால் கோட்டக்குப்பத்தின் பல்வேறு பகுதிகள் முழுவதுமாக இருளில் மூழ்கியுள்ளன. மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை மின்சாதனங்களை இயக்க முடியாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இது தொடர்பாக மின்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும், இன்னும் சற்று நேரத்தில் மின் விநியோகம் வழங்கப்படும்” எனவும் தெரிவித்தனர்.
இருப்பினும், நீண்ட நேரமாகியும் மின்சாரம் வழங்கப்படாததால், எப்போது மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலும் காத்திருப்பிலும் கோட்டக்குப்பம் பகுதி மக்கள் உள்ளனர்.


