கோட்டக்குப்பம் எம்.ஜி. சாலையில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையில், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து தானாகவே பணம் எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியின் சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இன்று மதியம் முதல், பல வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாகக் தெரிவித்துள்ளனர். சிலருக்கு ஆயிரம் ரூபாய் முதலும், சிலருக்கு அதிகபட்சமாக 90,000 ரூபாய் வரையிலும் பணம் கழிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் மூடிக்கிடந்த வங்கியின் முன்பு பெருமளவில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், வங்கி வாடிக்கையாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் இந்தியன் வங்கி அதிகாரிகள் மற்றும் காவல் துறை விளக்கம் அளித்துள்ளனர். அதில், “வங்கி சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகக் தெரிவிக்கின்றனர். கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட பணம் அனைத்தும் நாளைக்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கிலேயே மீண்டும் பாதுகாப்பாக வரவு வைக்கப்படும்” என உறுதியளித்துள்ளனர்.
மேலும், “அவ்வாறு நாளைக்குள் பணம் மீண்டும் கணக்கிற்கு வராத பட்சத்தில், வாடிக்கையாளர்கள் வரும் திங்கட்கிழமை என்று வங்கிக்கு நேரில் வந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்” எனவும் வங்கி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கி நிர்வாகம் விளக்கமளித்த போதிலும், இந்தத் திடீர் குளறுபடி பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. தங்கள் உழைப்புப் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வங்கியில் சேமிக்கும் மக்களுக்கு, இது போன்ற தொழில்நுட்பத் தவறுகள் பெரும் பீதியை உண்டாக்கியுள்ளன.
தற்போது வங்கியின் இணையதளச் சேவை மற்றும் UPI (யுபிஐ) ஆப்ஸ்கள் மூலமாகவும், அருகிலுள்ள ஏடிஎம் (ATM) மையங்களுக்குச் சென்றும் பொதுமக்கள் தங்கள் கணக்கில் உள்ள மீதித் தொகையைத் தொடர்ந்து சரிபார்த்து வருகின்றனர். வங்கி நிர்வாகம் உறுதியளித்தபடி நாளை பணம் மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.




