31.6 C
கோட்டக்குப்பம்
May 18, 2024
Kottakuppam Times
புதுச்சேரி செய்திகள்

மக்கள் ஒத்துழைக்காவிடில் புதுவையில் மீண்டும் முழு பொதுமுடக்கம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மக்கள் அரசு சொல்வதை கேட்கவில்லை என்றால், முழு பொதுமுடக்க உத்தரவை மீண்டும் புதுவையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருக்கிறது என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை கூறியதாவது, ‘‘புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. நாம் அதிகப்படியான கரோனா பரிசோதனை செய்தால்தான் கரோனா தொற்று உள்ளவர்களை கண்டுபிடித்து உடனே சிகிச்சை அளிக்க முடியும். எனவேதான், கதிர்காமம் மருத்துவ கல்லூரி மற்றும் ஜிப்மரில் அதிக அளவில் கரோனா பரிசோதனை செய்து வருகிறோம். இதேபோல், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டு மக்கள் வீட்டில் இருக்கும்போது அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலர், இயக்குநர் ஆகியோரிடம் நான் கூறியதன் அடிப்படையில் ஒரு முடிவு எடுத்து, 6 குழுக்களை போட்டுள்ளனர். 

எந்தெந்த பகுதிகளில் கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்களோ அவர்களது வீட்டுக்கு மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள சென்று பரிசோதனை செய்கின்றனர். அவர்களுக்கு சுவாச கோளாறு இருந்தால் உடனே மருத்துவமனையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, தமிழகத்தில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். முதல்வர் கோவிட் நிவாரணத்தில் இருந்து ரூ.1.2 கோடிக்கு 50 ஆயிரம் ஆர்டி-பிஆர்டி கருவிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து அதற்கான ஒப்புதல் கொடுத்துள்ளேன்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் உமிழ்நீர் பரிசோதனை செய்து முடிவு வருவதற்கு காலதாமதம் ஆகிறது. எனவே, ட்ருனென்ட் இயந்திரத்தின் மூலம் உமிழ்நீர் பரிசோதனை செய்ததால் 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் நிலை உள்ளது. அந்த இயந்திரத்தை வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் அந்த இயந்திரங்கள் காரைக்கால், மாஹே, ஏனாமுக்கு கொண்டு செல்லப்பட்டு குறுகிய காலத்தில் கரோனா பரிசோதனை செய்ய முடியும். புதுச்சேரி மக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், முகக்கவசம் அணிந்து செல்லுங்கள், திருவிழாக்களில் கலந்து கொள்ளாதீர்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

இருப்பினும் கடைபிடிப்பதில்லை. கரோனா தொற்றை தடுத்து நிறுத்த ஒருபுறம் நாம் முயற்சி செய்தால், மற்றொரு புறம் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. கரோனா தொற்றை பற்றி மக்கள கண்டுகொள்வதில்லை. விதிமுறைகளை கடைபிடிக்காமல் கோயில், திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் தாராளமாக கலந்து கொள்கின்றனர். எச்சரிக்கையாக இருப்பதில்லை. இதனால் பல பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவுகிறது. இதற்கு காரணம் மக்கள் ஒத்துழைப்பு இல்லாததுதான். இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நீரிழிவு, இருதய நோய், புற்றுநோய், சுவாச கோளாறு உள்ளவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார். அவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லாமல் இருப்பது நல்லது.

கடந்த 2 மாதங்களாக கரோனா தொற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அது செப்டம்பர் வரை செல்லும் என்று நினைக்கிறேன். எனவே மக்கள் விதிமுறைகளை கடைபிடித்து செயல்பட்டால் கரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்க முடியும். ஆனால், துரதிஷ்டவசமாக மக்கள் அதனை கடைபிடிப்பதில்லை. இதற்காக வரும் புதன்கிழமை மாநில பேரிடர் துறை கூட்டத்தை நான் கூட்டவுள்ளேன். அந்த கூட்டத்தில் சில கடுமையான முடிவுகளை நாங்கள் எடுக்க உள்ளோம். மக்கள் அரசு சொல்வதை கேட்கவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவை மீண்டும் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் எங்களுடைய அரசு இருக்கிறது.

மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனை முழுமையாக அரசு நிறைவேற்றும். மாநில வருவாய் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. மக்களின் உயிர் முக்கியம். ஆகவே தேவையான அத்தியாவசிய பொருட்களை தவிர மற்ற கடைகளை மூடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஆகவே வியாபரிகளையும், பொதுமக்களை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு சென்றால் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வாங்க வேண்டும். இப்போது கரோனா தொற்றால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதற்கு மருத்துவர்கள் உதவி செய்ய வேண்டும்.

90 சதவீதம் பேர் குணமடைந்து செல்கின்றனர். 10 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில் 5 சதவீதம் பேர் ஆக்சிஜன் கொடுத்தால் குணமடைகின்றனர். மீதம் 5 பேர் வெண்டிலேட்டர் மூலம் அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே மருத்துவர்கள் அந்த 10 சதவீதம் பேர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இறப்பை தவிர்த்து, உயிரிழப்பு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். கரோனா தொற்று பரவாமல் இருக்க மருத்துவர்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளேன்.கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான பல அமைப்புகள் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க நிறுவனம் இப்போது மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சொல்கின்றனர்.

இந்தியாவில் கோவிட் 19 என்ற மருந்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேபோல் ரெம்டெசிவியர் என்ற மருந்து இப்போது விநியோகத்துக்கு வந்துள்ளது. இவையெல்லாம் வந்தாலும் கூட விலை குறைவாக ஒரு நோயாளிக்கு ரூ.240 கிடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெகு விரைவில் இந்த மருந்தை கொண்டுவந்தால் தான் கொரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியும். இதற்கான அனைத்து வேலைகளையும் பல நாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்தியாவிலும் சிறப்பாக பணிபுரிந்து அந்த மருந்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அகில இந்திய அளவில் பார்த்தால் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 14 லட்சம் பேர் குணமடைந்து சென்றுள்ளனர். சுமார் 40 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இது நமக்கு பேரிழப்பு. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பாடுபட்டாலும் கூட கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரோனாவின் தாக்கத்தை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு எந்த அறிவுரைகளை கூறினாலும், அதனை நிறைவேற்ற மாநில அரசுகள் தயாராக இருந்தும், கரோனாவின் தாக்கம் குறையவில்லை. 

ஆகவே கரோனாவுக்கான மருந்து விரைவில் வந்து, அதனை பயன்படுத்தினால்தான் குறைந்த காலத்தில் கொரோனா பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டும். மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வேகமாக ஈடுபட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளை பொருத்தவரை அவர்களின் ஒத்துழைப்பு நமக்கு அவசியம். அவர்கள் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அதிகப்படியான படுக்கைகளை கொடுப்பதாக ஏற்றுக்கொண்டனர். குறிப்பாக கரோனா தொற்றாளர்களை அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் சென்டரில் வைத்து கண்காணிக்க அனுப்புகிறோம். ஆனால் சில தனியார் மருத்துவக் கல்லூரிகள் நமக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. 

இது சம்மந்தமாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் தெரிவித்து, தனியார் மருத்துவக் கல்லூரிகள் கரோனா தொற்று வேகமாக பரவும் இந்த நேரத்தில் அரசோடு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி ஒத்துழைக்காத மருத்துவக் கல்லூரிகள் மீது எங்கள் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். தேவைப்பட்டால் அந்த மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகத்தை எடுத்துக்கொள்ள மாநில அரசு தயங்காது’’ என்றார் முதல்வர் நாராயணசாமி.

https://www.facebook.com/kottakuppamtimes/videos/301317694447284

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

புதுவையில் தனியார் பஸ்கள் ஓடத் தொடங்கின கடலூர், விழுப்புரத்துக்கும் விரைவில் பஸ் போக்குவரத்து

புதுச்சேரி முழுவதும் மின்தடை – உயரதிகாரிகளுடன் அமைச்சர் அவசர ஆலோசனை

டைம்ஸ் குழு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு

Leave a Comment