28.6 C
கோட்டக்குப்பம்
May 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31-க்குள் விரைந்து துணை மின் நிலையம் அமைக்கவில்லையெனில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என மக்கள் நல கூட்டமைப்பு அறிவிப்பு.

கோட்டக்குப்பம் பகுதியில் தினம் தினம் தொடர் மின்வெட்டையும் மற்றும் குறைந்த மின்னழுத்தத்தையும் மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சி முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கவும், நகராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின் நிலையத்தை உடனடியாக அமைத்திடவும், கோட்டக்குப்பம் மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் தொடர் முழுக்க கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு, நேற்று (25/10/2023) புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் நடைபெற்றது.

போராட்டத்திற்கு ஆதரவளித்து வணிகர்கள் கோட்டக்குப்பத்தில் இருந்து பெரிய முதலியார்சாவடி வரை உள்ள அனைத்து கடைகளும் அடைத்து தங்களின் கண்டனத்தை அரசுக்கு பதிவு செய்தனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால், எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் கோட்டக்குப்பதிலுள்ள முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஜி அபுபக்கர் அஜ்மஹால் அவர்கள் தலைமை தாங்கினார். சென்னை பத்திரிக்கையாளர் அய்யநாதன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் நிறுவன தலைவர் மங்கையர் செல்வன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி திருநாவுக்கரசு, புதுவை மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், உட்பட்ட பலர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன உரையில், “கோட்டக்குப்பம் ஊராட்சி, தேர்வு நிலை பேரூராட்சி, சிறப்பு பேரூராட்சி மற்றும் இரண்டாம் நிலை நகராட்சி என பெயரில் மட்டும் மாற்றிக் கொண்ட கோட்டக்குப்பம் எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாதது கண்டிக்கத்தக்கது எனவும், தொடர் மின்வெட்டால் மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும், நோயாளிகள் பெரும் அவதி அடைவதாகவும், மின்சாரத்தை மட்டும் நம்பி தொழில் நடத்தும் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மின்தடையால் பணிகள் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வருவதாகவும்” தெரிவித்தனர்.

உலகின் அதிக மழை பெய்யும் பகுதியான, இந்தியாவின் மேகாலயா சிரபுஞ்சியில் 24 மணி நேரமும் மழை பெய்யும் பகுதியில் மின்வெட்டு இல்லை. ஆனால், நமது பகுதியில் சிறு காற்று அடித்தாலும், மழை பொழிந்தாலும் பவர் கட் செய்யப்படுவது ஏன்? மேலும், அரசு அதிகாரிகள் தொடர் மின்வெட்டை குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் ஆவணம் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இறுதியாக மக்கள் நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கூறிய போது, “இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றி பெற்றது எனவும், மேலும் அரசு இது சம்பந்தமாக உடனடியாக தீர்வு காண வேண்டும். மேலும், கோட்டக்குப்பம் பகுதிக்கு டிசம்பர் 31க்குள் துணை மின் நிலையம் விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் தொடரும்” எனவும் தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்திற்கு, அனைத்து ஜமாத் நிர்வாகங்கள், கோயில் நிர்வாகங்கள், மீனவ பஞ்சாயத்தார்கள், வியாபாரிகள் சங்கங்கள், சமூக நல அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உலமாக்கள் சபை மற்றும் பெண்கள், இளைஞர்கள் உட்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, கோஷமிட்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்தப் போராட்ட செய்தியானது அனைத்து நாளிதழ்களும் வெளியிடப்பட்டுள்ளது, குறிப்பாக டைம்ஸ் ஆப் இந்தியா, பாரத் டைம்ஸ், தி ஹிந்து, தினமணி, தினகரன், தினத்தந்தி, தினமலர் மற்றும் செயற்கைக்கோள் செய்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. இதன் மூலம், அரசின் கவனத்திற்கு சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் கிவ்ஸ் சங்கத்தின் மதரஸா ஆண்டு விழா.

டைம்ஸ் குழு

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா: கோட்டக்குப்பம் 20-வது வார்டு அங்கன்வாடியில் நலத்திட்ட உதவிகள்.

டைம்ஸ் குழு

தேர்தலை முன்னிட்டு கோட்டகுப்பதில் காவல் துறையினர் அணிவகுப்பு நடத்தினார்.

Leave a Comment