செப்டம்பர் 17ம் தேதி இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைபெறும் என்றும் அதற்காக இன்று (ஜூலை 15) மாலை 6 மணி முதல் பதிவு செய்யலாம் எனவும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 வரை www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். செப்.,17ம் தேதி முதல் இன்ஜி., கவுன்சிலிங் நடைபெறும். அக்டோபர் 15க்குள் கவுன்சிலிங்கை முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. சான்றிதழ் சரிபார்க்க மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் நேரில் வர வேண்டாம். ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்ஜி., மாணவர் சேர்க்கைக்கான 52 உதவி மையங்கள் அமைக்கப்படும். தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன; மொத்த இடங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இன்ஜி., சேர்க்கை குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும். கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும். கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.