புதுச்சேரி: மே 3 ஆம் தேதிக்கு பிறகு நாம் ஊரடங்கை தளர்த்திவிட்டால் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா தொற்றால் 3 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முன்தினம் 43 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேர் இல்லாமல், கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் மொத்தம் 44 பேர் உள்ளனர்.
புதுச்சேரியில் இதுவரை 2,156 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 2,173 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் மக்கள் இன்னும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் இருப்பது தெரிகிறது. காரணம் காலை நேரங்களில் மக்கள் மிகுந்த நெருக்கத்துடன் இருப்பது தெரிகிறது.
வரும் மே 3 ஆம் தேதி நாம் ஊரடங்கை தளர்த்திவிட்டால் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. இருப்பினும் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் புதுச்சேரியை கொரோனா இல்லாத மாநிலமாக அறிவிப்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கலாம் என மோகன்குமார் தெரிவித்துள்ளார்.