ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலையும், அந்நாட்டின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி படுகொலை செய்யப்பட்டதையும் கண்டித்து, கோட்டக்குப்பத்தில் இன்று இரவு உணர்ச்சிப்பூர்வமான அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் இணைந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து இந்தியா முழுவதும் இன்று (மார்ச் 1) பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை பல்வேறு இடங்களில் ஈரானுக்கு ஆதரவாகவும், மறைந்த மதகுரு அயதுல்லா கமேனிக்கு இரங்கல் தெரிவித்தும் ஊர்வலங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாகவே கோட்டக்குப்பத்திலும் இந்த அறப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக இன்று இரவு தராவிஹ் தொழுகை முடிந்தவுடன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (த.மு.மு.க) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமுமுக நகரத் தலைவர் அபுதாஹிர் தலைமை தாங்கினார். பங்கேற்ற ஊர் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஏகாதிபத்தியப் போக்கைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, மற்றும் நகர நிர்வாகிகள் அஷ்ரப் அலி, ஜரீத், ஏகே பஷீர் அஹமது, டாக்டர் தாரிப் அலி, ஆஸ் (எ) ஆபிதீன், நூருல் அமீன், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.









