விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளுக்கான தேர்தல் விறு விறுப்பாக நடந்து முடிந்தது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோட்டக்குப்பம் நகராட்சியில் 76 சதவீத வாக்குகள் பதிவானது. இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்கான வாக்கு எண்ணும் மையமான கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
மேலும், அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், உள்ளூர் போலீசார் அடங்கிய 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து வருகிறது. மேலும் வாக்குப்பதிவின் முடிவுகள் அறிவிக்க தேவையான வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.