கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களின் வாழ்வாதார உரிமைகளை வலியுறுத்தி நேற்று(16/02/2026) முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் பி.எஃப் (PF) மற்றும் இ.எஸ்.ஐ (ESI) தொகையை, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் முறையாகச் செலுத்தவில்லை என்று புகார் எழுந்துள்ளது. தங்களின் உழைப்பிற்கான பலன் முறையாகச் சென்றடைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, பணியாளர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால், கோட்டக்குப்பம் நகராட்சியின் பல வார்டுகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, புனித ரமலான் மாதம் தொடங்க உள்ள நிலையில், ஊர் பகுதிகளில் சுகாதாரம் பாதிப்படைவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்:
”தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அவர்களின் உழைப்பிற்கான பலன் அவர்களுக்கு முறையாகக் கிடைக்க வேண்டும். வரும் நாட்கள் பண்டிகைக் காலம் என்பதால், நகராட்சி நிர்வாகமும், ஊர் பிரமுகர்களும் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பணியாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளனர்.






