கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூற்றாண்டு நூலகத்தில், இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவில், மேனாள் மாவட்டக் கல்வி அதிகாரி திரு. M. ஹுசைன்கான் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, குடியரசு தினச் சிறப்புரையாற்றினார்.
முத்தியால்பேட்டை புனித ரொசாரியோ திருச்சபையின் நிர்வாகி திரு. ரெமி ஜெரார்டு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், “தேசத்தின் முன்னேற்றத்தில் சமய ஒற்றுமையின் பங்கு” குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
அடுத்ததாக, அஞ்சுமன் நூற்றாண்டு விழாக் குழுவின் நெறியாளர் சோ. பாலசுப்பிரமணியன், சமூக மேம்பாட்டில் நூலகங்களின் இன்றியமையாத் தேவை குறித்தும், அதன் பன்முகப் பார்வை குறித்தும் விளக்கவுரையாற்றினார்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் கண்ட கனவான மதச்சார்பற்ற தேச உருவாக்கத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா அமைந்திருந்தது. இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் ஒரே மேடையில் இணைந்து பங்காற்றியது, காண்போர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், வேற்றுமையில் ஒற்றுமை எனும் தத்துவத்திற்குச் சான்றாகவும் அமைந்தது.
விழாவின் நிறைவாக, அஞ்சுமனின் மூத்த உறுப்பினரும், காயிதேமில்லத் விருது பெற்றவருமான ஹாஜி வி.ஆர். முஹம்மது இப்ராஹிம் நன்றியுரை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அஞ்சுமன் செயற்குழு உறுப்பினர்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், அரபிக்கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனத் திரளானோர் கலந்து கொண்டனர்.










