புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, வரும் புதன்கிழமை அன்று மகாபலிபுரம் காரைக்காலுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
இந்த எச்சரிக்கையை நாம் அலட்சியம் செய்யாமல் வானிலை மையமும் அரசும் அறிவித்துள்ள அறிவுறுத்தலின்படி நம்மை தயார் படுத்திக் கொள்வோம்.
2011ம் ஆண்டு நம் பகுதியைத் தாக்கிய தானே புயலினால் நாம் சுமார் இரண்டு மாதங்கள் அடிப்படை வசதிகளை இழந்து பெரும் துயருற்றோம்.
நாம் அலட்சியமாக இருந்ததினால் பல அசௌகரியங்களையும் இழப்புகளையும் பெரும் இழப்புகளையும் சந்தித்தோம்.
அந்த அனுபவத்திலிருந்து பாடம் பெற்று தற்போது நம்மை நோக்கி நெருங்கி வரும் நிவர் புயலின் தாக்கம் ஏற்பட்டால் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
முக்கியமாக நம்முடைய இரண்டு சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்களை பெரும் மரத்து அடியிலோ, அருகிலோ, மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் நிறுத்தாமல் காலி மைதானங்களில் நிறுத்துவோம்.
பலவீனமாக இருக்கும் குடிசைகளிலும் தாழ்வு பகுதிகளிலோ இல்லாமல் அரசு ஏற்பாடு செய்துள்ள புயல் பாதுகாப்பு மையங்களை கண்டறிந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வோம்.
பொருட் சேதம் உயிர் சேதங்கள் ஏற்படா வண்ணம் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் புயல் பெரும் வீரியம் கொண்டு தாக்கி மின்சாரத் தடை ஏற்பட்டால் அதை சமாளிக்க மெழுகுவர்த்திகளை சேகரித்து கொள்வோம்
பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டுகள் பேட்டரிகள் தீப்பெட்டி ஆகியவற்றை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்வோம் இதேபோன்று குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு தேவையான பால் பவுடர் தேவையான அளவு சேகரித்து கொள்வதும் நமக்கு உதவியாக இருக்கும்.
அரசு அறிவித்துள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றி இந்த புயல் நம்மைத் தாக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்வோம்.
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்
கோட்டக்குப்பம் டைம்ஸ்.